

சென்னை,
தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை இறுதி செய்யும் நோக்கில், சென்னையில் நாளை இரண்டாவது முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இயக்கப்படும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, சென்னையில் கடந்த ஜூலை 9-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து 90 பேரும் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து, புதிய கட்டணம் தொடர்பான இறுதி அறிக்கையை அரசு தயாரித்துள்ளது. இதனை இறுதி செய்து, புதிய கட்டணத்தை அறிவிப்பதற்காக சென்னையில் நாளை இரண்டாவது முறையாக முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது.