புதுப்பெண் வெட்டிக்கொலை குடும்பத்தகராறில் கணவர் வெறிச்செயல்

குடும்பத்தகராறில் புதுப்பெண்ணை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பெண் வெட்டிக்கொலை குடும்பத்தகராறில் கணவர் வெறிச்செயல்
Published on

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம்செங்கோட்டை தாலுகா கேசவபுரம் அருகே உள்ள கீழப்புதூரை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 20). இவருக்கும், புளியங்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் (35) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்ற நிலையில் 2-வதாக கஸ்தூரியை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே கண்ணனுக்கும், கஸ்தூரிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கஸ்தூரி கோபித்துக்கொண்டு தனது பாட்டியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கண்ணன், மனைவியை பார்த்து அழைத்து செல்ல கீழப்புதூருக்கு வந்தார். அப்போது அவரது பாட்டி தெய்வானை, தனது பேத்தி வேலைக்கு சென்றிருப்பதாக கூறியதை தொடர்ந்து, கஸ்தூரியின் வருகைக்காக கண்ணன் வீட்டில் காத்திருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்றார்.

வேலைக்கு சென்று விட்டு மாலையில் கஸ்தூரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டுக்கு வரும் பாதையில் சாலையின் ஓரத்தில் இரண்டு லாரிகளுக்கு இடையே இருசக்கர வாகனத்தில் கண்ணன் மறைந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கஸ்தூரியை, கண்ணன் இருசக்கர வாகனத்தில் சென்று மோதி கீழே தள்ளி கையில் வைத்திருந்த அரிவாளால்சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த திடீர் தாக்குதலில் உடலில் வெட்டு விழுந்த நிலையில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து கண்ணன் தப்பிச்சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கீழப்புதூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற கண்ணனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட கஸ்தூரிக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் தென்காசி உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com