ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதியை ஏப்ரல் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.3.2025) தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசியதாவது:
"ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவினை நனவாக்கும் பொருட்டு சென்னை, நந்தனம், எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன், 121 அறைகளோடு கூடிய 500 மாணவர்கள் தங்கி பயில நவீன வசதியான நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சிக்கூடம், உள் அரங்கு விளையாட்டுக்கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய விடுதி ரூ.44.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தை போற்றும் வண்ணம், சமத்துவ நாளான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி மாணவர்களின் நலனுக்காக இந்த விடுதி திறக்கப்படவுள்ளது. எனவே, இங்கே வருகை புரிந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் திறப்பு விழாவிலே கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இக்கூட்டத்தின் மூலமாக உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு அவர் கூறினார்.






