

சென்னை,
தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. இவை இன்று முதல் (ஜூலை 1ஆம் தேதி) அமலுக்கு வந்துள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை ரூ.180-இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இன்று முதல் (2021 ஜூலை 1ஆம் தேதி) 2025 ஜூன் 30 ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். மேலும் அரிய வகை சிகிச்சை, அறுவை சிகிச்சை வேண்டுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். அதற்காக, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.