‘அரசியலில் ஆன்மிகம்’ என்பதை எதிர்த்து புதிய இயக்கம் - சுப.வீரபாண்டியன் அறிவிப்பு

ஆன்மிக அரசியலை எதிர்த்து ‘அரசியலில் ஏன் ஆன்மிகம்’ என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
‘அரசியலில் ஆன்மிகம்’ என்பதை எதிர்த்து புதிய இயக்கம் - சுப.வீரபாண்டியன் அறிவிப்பு
Published on

சென்னை,

அரசியலில் ஆன்மிகம் என்ற கொள்கையை முன்வைத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலில் ஏன் ஆன்மிகம் என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.வீரபாண்டியன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகநீதியை அடிப்படையாக கொண்டு தான் தமிழக அரசியல் இருந்து வருகிறது. தமிழகத்தில் சமூகநீதி அரசியலை அகற்றி விட்டு மதவாத அரசியலை கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவை செயல்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் தான் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்ற கொள்கையை முன்வைத்து கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சி, புதிய கட்சி அல்ல. அது பா.ஜ.க.வின் கிளை தான். ஆன்மிகமும், அரசியலும் வேறு என்ற கருத்தியலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இயக்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, புதிய குரல், இளைஞர் இயக்கம், தமிழ்நாடு திராவிடர் கழகம், திராவிடன் சமூகப்பணிகள் இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஆகியவை தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. ஆன்மிக அரசியலை எதிர்ப்போம், தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவோம் என்ற கொள்கைகளை கொண்ட இயக்கங்கள் எங்களுடன் சேர்ந்து செயல்படலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com