

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி என்ற நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்பமனு வாங்குதல், நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு), தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும், கூட்டணியில் இணைய விருப்பமுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை குழுவை பாஜக இன்று அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக பாஜக மாநில துணைத்தலைவர் விபி துரைசாமியும், துணைத்தலைவராக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்,
வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026 சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது.
குழு விவரம்
தலைவர்; விபி துரைசாமி (முன்னாள் எம்.பி., பாஜக மாநில துணைத்தலைவர்
துணைத்தலைவர்: பாலச்சந்திரன் (பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்)
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.