நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
Published on

செங்கல்பட்டு,

சென்னை பெருநகரில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்திற்காக, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை, புழல், பூண்டி ஏரிகளில் இருந்தும், கடலுர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், பெருமளவு குடிநீர் பெறப்படுகிறது. இதுதவிர, கடல்நீரில் இருந்தும் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உப வடிநிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டனர்.

இதன்படி, மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் ரூ.342.6 கோடி மதிப்பில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், 5,161 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார். இதற்கான பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com