

சென்னை,
துரை வைகோ எம்.பி. அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து, கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தைப் பிரித்து கலிங்கப்பட்டி, செவல்குளத்தில் புதிய அலுவலகங்கள் அமைக்கக் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நேற்று (09.09.2026) மாலை 7 மணியளவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கீழகண்ட கோரிக்கைக் கடிதத்தை வழங்கினேன்.
அதில், தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட, A. கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, கலிங்கப்பட்டி மற்றும் செவல்குளம் ஆகியவற்றைத் தலைமையிடங்களாகக் கொண்டு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைத்துத் தரக் கோரினேன்.
மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
அமைச்சர் என் கோரிக்கையை பரிசீலித்துவிட்டு, தற்போது மக்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதால் உடனடியாக செய்ய இயலாது என்றும், அப்பணி முடிவுற்றபின் 2027 ஆம் ஆண்டு இக்கோரிக்கையை அவசியம் செயல்படுத்தித்தருவதாக உறுதியளித்தார். அமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.