யு.ஜி.சி.யின் புதிய விதி: திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

யு.ஜி.சி.யின் புதிய விதிக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
யு.ஜி.சி.யின் புதிய விதி: திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை (10-ந் தேதி) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் பறிப்பதற்கு மத்தியில் ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ். பாஜக அரசு தொடர் முயற்சிகளைச் செய்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் எளிய மக்களின் கல்வியைக் கபளீகரம் செய்வதற்கும், சமூகநீதியைப் பறிப்பதற்கும் செய்த முயற்சிகளைத் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவும், சமூகநீதியைப் பாதுகாக்கவும், 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற நிலையை எட்டுவதற்கும் தடையாக அமையும் எதையும் ஒழிப்பது என்றும் உறுதி ஏற்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025-ஐ கண்டித்தும், மாணவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்களிடம் இதன் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலும், முதல் கட்டமாக, நாளை (10.01.2025) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கல்லூரி மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு, நமது கண்டனக் குரல் செங்கோட்டையில் அமர்ந்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செவிப்பறையை கிழிக்கச் செய்திட அடலேறுகளே அணிதிரண்டு வாரீர்.. வாரீர்… என அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்தடுத்த நடவடிக்கைகளாக, மாவட்ட அளவில் கருத்தரங்குகளையும், போராட்டங்களையும், கையெழுத்து இயக்கத்தையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், ஒன்றிய அரசு கல்வித் துறை மீது நடத்திவரும் தாக்குதலை வெகு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், அனைத்து வகைப் பிரச்சாரங்களிலும் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com