

சென்னை,
சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார்.
அதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடியும் ஒதுக்கப்படும்.
மேலும், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் ரூ.49 லட்சம் செலவில் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அறிவுசார், செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு ஏற்ப மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என 100 பேர் பயன்பெறும் வகையில் 1.5 ஏக்கர் பரப்பளவில் 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தனித்து பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையை பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர, நகர தாழ்தள, விரைவு, டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையை அறிமுகப்படுத்த ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகையும் 2026-27-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 9 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.