சென்னையின் புதிய அடையாளம்: மத்திய சதுக்கத்தில் ரூ.34 கோடியில் பூங்கா, சுரங்க நடைபாதைகள்

சென்னையின் புதிய அடையாளமான மத்திய சதுக்கத்தில் ரூ.34.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, சுரங்க நடைபாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னையின் புதிய அடையாளம்: மத்திய சதுக்கத்தில் ரூ.34 கோடியில் பூங்கா, சுரங்க நடைபாதைகள்
Published on

சென்னை,

சென்னையின் அடையாளம் என்று கூறப்படும் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொது கூடம் உள்ளிட்டவற்றை உலகதரத்திற்கு மாற்ற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்ட்ரல் ஸ்கொயர் என்று அழைக்கப்படும் மத்திய சதுக்கம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ரூ.400 கோடி நிதி உதவியுடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சென்ட்ரல் பிளாசா என்ற பெயரில் அடுக்கு மாடிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் பயணியர் தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல்கள் மற்றும் தரைக்கு அடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம் என சகல வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இதன் ஒரு பகுதியாக ரூ.34.22 கோடி மதிப்பீட்டில் சதுக்க பூங்கா என்றழைக்கப்படும் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, பூங்கா ரெயில் நிலையங்களை இணைக்கும் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கனவே உள்ள சுரங்கப்பாதையுடன் புதிதாக அமைக்கப்பட்ட பாதையும் இணைக்கப்பட்டு உள்ளது.

மத்திய சதுக்கம் என்ற பெயர் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அருகில் மத்திய சதுக்கம் அமைக்கும் பணிக்கான புகைப்படங்களை முதல் அமைச்சர் பார்வையிட்டார். பணி விவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

முதல்அமைச்சருக்கு நன்றி

மத்திய சதுக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிளம் பூ மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். சதுக்கத்தில் ரூ.12.49 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கிரானைட் இருக்கைகள், கான்கிரீட் பெஞ்சுகள், வண்ண விளக்குகள், பலவிதமான அலங்கார தாவரங்கள், கண்ணை கவரும் நீர் ஊற்றுகள், பளிங்கு நடைபாதைகள் முழுவதையும் முதல்-அமைச்சர் பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் பேட்டரி காரில் இருந்து இறங்கி ரூ.21.73 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதை மற்றும் நகரும் படிக்கட்டுகளுக்கான கல்வெட்டை முதல்அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து நகரும் படிக்கட்டு மூலம் சுரங்கநடைபாதை வழியாக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த செவிலியர்கள், ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன், மெட்ரோ ரெயில்நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com