நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?

உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தன்க்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?
Published on

நெல்லை,

இருட்டுக்கடை அல்வா  

நெல்லை டவுண் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். நெல்லையின் முக்கிய அடையாளமாக இருட்டுக்கடை அல்வா திகழ்ந்து வருகிறது.

வரதட்சணை புகார்

இந்த சூழலில் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் நெல்லையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா தனது தாயுடன் வருகை தந்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கவிதா கூறுகையில், "'எனது மகளுக்கு தாலி கட்டிய அடுத்த நொடியில் இருந்தே மணமகன் வீட்டினர் வரதட்சணை கொடுமை செய்து வருகின்றனர். பணம் மற்றும் நகை அதிக அளவு கேட்டு மிரட்டல் விடுத்தனர். எனது மகளின் மாமனாரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார். எனது மகளின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணை கோவையில் உள்ள வீட்டிற்கே அழைத்து வருகிறார். இதன் மூலம் கணவருடன் தினமும் சண்டை ஏற்பட்டது. எங்களது புகழ் பெற்ற இருட்டுக்கடையை தனது பெயருக்கு மாற்றிக் கொடுத்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும் என்று மிரட்டுகிறார்." என்று கூறியிருந்தார்.

இருட்டுகடையை வரதட்சணையாக கேட்கவில்லை

இதுதொடர்பாக கனிஷ்காவின் கணவர் தரப்பில் விளக்கம் அளிகப்பட்டுள்ளது. அதாவது கனிஷ்காவின் மாமனார் இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், "இருட்டுகடையை வரதட்சணையாக நாங்கள் கேட்கவில்லை. வரதட்சணை வாங்காமல்தான் திருமணமே செய்தோம். அந்த குடும்பம் அதிகப்படியான கடன் சுமையில் உள்ளது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் பெயருக்கே, இருட்டு கடை தற்போதுதான் வந்தது. இருட்டுக்கடையின் முந்தைய உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக உறவினர்களே குற்றம் சாட்டி இருந்தனர். எங்கே இருட்டுக்கடை முறைகேடாக எழுதிவாங்கப்பட்டது வெளியில் வந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொய் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்." என்று கூறினார்.

இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்

இவ்வாறு இந்த விவகாரம் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம் வந்துள்ளது. அதாவது, தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங், இருட்டு கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என பெது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், கடையின் முன்னாள் உரிமையாளரான பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தன்க்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com