லாரி மோதி புதுமண தம்பதி பலி

லாரி மோதி புதுமண தம்பதி உயிரிழந்தனர்.
லாரி மோதி புதுமண தம்பதி பலி
Published on

லால்குடி:

புதுமண தம்பதி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் சிறுவயலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராகினி (35). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுவயலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார், தனது மனைவியுடன் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ராகினியின் சகோதரி வீட்டுக்கு வந்தார். நெ.1 டோல்கேட் வழியாக சாத்தமங்கலம் நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

லாரி மோதி சாவு

லால்குடி அருகே ஆங்கரை கோவிந்தராஜபுரம் பகுதியில் வந்தபோது, கோவையில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்ற அரியூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற லாரி, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த கணவன்-மனைவி மீது லாரியின் சக்கரம் ஏறி, இறங்கியது.

இதில் அவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

மேலும் இது குறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கோவை காந்தி நகரை சேர்ந்த பிரபாகரனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 8 மாதத்தில் கணவன்-மனைவி விபத்தில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com