

கடலூர்,
,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் பாலமணிகண்டன் (வயது 30). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவரது மகள் நிவேஷாவும் (25) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர். இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலமணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. தினமும் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி நிவேஷா கடுமையாக கண்டித்தார். இதனால் கணவன்,மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் போதெல்லாம், குடும்பத்தினர் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையும் பாலமணிகண்டன் வழக்கம் போல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிவேஷா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே மீண்டும் பலத்த தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிவேஷா, வாழ்க்கையில் விரக்தியடைந்து யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அறைக்குள் சென்ற பாலமணிகண்டன், மனைவி நிவேஷா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அவர், தானும் வாழ விரும்பாமல் வீட்டில் இருந்த வேட்டியால் தூக்குப்போட்டுக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், தூக்கில் தொங்கிய பாலமணிகண்டனை உடனடியாக மீட்டு காப்பாற்றினர்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிவேஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிவேஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பாலமணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.