

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்த நிலையில், கடந்த 8-ந் தேதி மாயமானார். நேற்று முன்தினம் காலையில் வனத்துறையினர், பொதுமக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி எல்லையில் பாலகிருஷ்ணன் இறந்து கிடந்தார். அவரது உடலை புலி கடித்து தின்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஊற்று நீரை தடுத்து குழாய் மூலம் வீட்டு தேவைக்காக தண்ணீர் கொண்டு வருவதற்கான பணியில் ஈடுபடும் போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி பாலகிருஷ்ணனை தாக்கி கொன்றது தெரிய வந்தது. மேலும் உடலை நீண்ட தூரம் இழுத்து சென்று உடற்பாகங்களை சாப்பிட்டது தெரியவந்தது.
இதனிடையே பாலகிருஷ்ணனை கடித்துக்கொன்ற புலியை பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில், தொடர் ஆபத்து ஏற்படும் என்ற அபாயம் உள்ளதாக போலீசார், வனத்துறையினரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் தேவராஜ் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினர் தொழிலாளியை தாக்கிய புலி நடமாட்டம் உள்ள இடத்தில் 16 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
தொடர்ந்து நவீன டிரோன் மூலம் புலி அப்பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் வனத்துறையினர் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொழிலாளியை கொன்ற புலியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரு கிறது. இதனால் 16 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தனியாக எங்கும் நடந்து செல்லக்கூடாது, என்றனர்.