

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவர், 21-ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புலியை கூண்டு வைத்தோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்கரா உத்தரவிட்டார். இதன்படி புலியை கடந்த 17 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மலைகள், செங்குத்தான பள்ளத்தாக்குகள், பாறை குகைகளில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி நடைபெறுகிறது. சுமார் 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 13 கூண்டுகள், 170 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.