

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைக ளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அவை உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அத்துடன் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ஐபீல்ட் வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னூர் வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்தது ஆண் சிறுத்தை ஆகும். 10 முதல் 15 வயதுக்குள் இருக்கும். வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட ஏற்பட்ட மோதல் காரணமாக சிறுத்தை இறந்து இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
பின்னர் முதுமலையில் இருந்து வன கால்நடை டாக்டர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டது.