நிபா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - கோவை கலெக்டர் அறிவுரை

கோப்புப்படம்
கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை,
கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் 'நிபா' வைரஸ் பரவி வரும் நிலையில், தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், வாலிபர் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 'நிபா' வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;
"கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால், அது குறித்து தகவல் தெரிவிக்க அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.






