

சென்னை,
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை கரையை கடக்கிறது.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு செல்லும் அரசு பேருந்துகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம் உட்பட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் சிக்கி
தவித்து வருகின்றனர். பேருந்து சேவை நிறுத்தம் குறித்த அரசின் அறிவிப்பு பற்றி அறியாதவர்கள் பேருந்து நிலையங்களில் அல்லாடி வருகின்றனர்.