கடனை திரும்பப் பெற என்.எல்.சி. தொழிலாளி கடத்தல்; 3 நாட்கள் அடைத்து வைத்து தாக்குதல் - 4 பேர் கைது

என்.எல்.சி. தொழிலாளியை காரில் கடத்திச் சென்று, மூன்று நாட்கள் அடைத்து வைத்து தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கடனை திரும்பப் பெற என்.எல்.சி. தொழிலாளி கடத்தல்; 3 நாட்கள் அடைத்து வைத்து தாக்குதல் - 4 பேர் கைது
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூர் காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி ரமேஷ், கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற நிலையில், இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுதா, வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, 30-ந்தேதி ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பிய ரமேஷ், தன்னை 4 பேர் காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறினார்.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிற்றரசு என்பவரின் மனைவியிடம் ரமேஷின் நண்பர் சுரேஷ்குமார் 42 சவரன் நகைகளை பெற்றுக்கொண்டு திருப்பித் தரவில்லை என தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிற்றரசு, தனது கூட்டாளிகளான சதீஷ்குமார், அல்லிராஜன், முத்துக்குமரன் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷையும், சுரேஷ்குமாரையும் கடத்தியுள்ளனர்.

ரமேஷை மிரட்டி, அவரது பெயரில் இருந்த காரை சதீஷ்குமார் பெயருக்கு மாற்றவும், 4 ஏக்கர் விவசாய நிலத்தை கிரயம் செய்து தரவும் கையெழுத்து பெற்றுள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் முத்துக்குமரன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com