7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பொது பஸ் போக்குவரத்துக்கு வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 7-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் மாநிலத்துக்குள்ளாக சுமார் 3 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்களும் வருகிற 7-ந்தேதி முதல் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆம்னி பஸ்களை வருகிற 7-ந்தேதி முதல் இயக்கவாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்து இருக்கின்றனர்.

இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனையின் நிறைவில் இந்த முடிவை அவர்கள் எடுத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு பஸ்சை அதன் உரிமையாளர் எடுத்து இயக்குவதற்கு குறைந்தது ரூ.2 லட்சமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2 காலாண்டு சாலை வரியாக ரூ.2 லட்சமும் என மொத்தம் ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது.

எங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தும், எங்களால் இயக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் வருகிற 7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு, 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com