8 மாதங்களாக வராத குடிநீர்: வேடசந்தூரில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டனர்
பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் சாலை மறியல் போராட்டம்
Published on

திண்டுக்கல்,

வேடசந்தூரில் சுமார் 8 மாதங்களாக குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் அரசு பேருந்துகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீருக்கு அவதி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

அதிகாரிகள் அலட்சியம்

இதுகுறித்து ஊராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க எவ்வித தற்காலிக அல்லது நிரந்தர நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

அதிகாரிகளின் இந்த தொடர் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குறிப்பாகப் பெண்கள், திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு

அதன்படி, இன்று காலை காலி குடங்களுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 அரசு பேருந்துகளை மறித்து சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் மற்றும் பேருந்து சிறைபிடிப்பு போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

லாரிகள் மூலம் உடனடியாக தற்காலிக குடிநீர் வழங்கவும், குழாய்கள் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நிரந்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

போராட்டம் வாபஸ்

இதையடுத்து பொதுமக்கள், தங்களது மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, சிறைபிடித்த பேருந்துகளை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com