போலீஸார் லஞ்சம் கேட்டால் இனி தப்ப முடியாது! தனிப்பிரிவு தொடக்கம்... இந்த எண்ணில் புகார் கொடுங்க

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை,

சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தனிப்பிரிவு தொடக்கம்

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கேட்டால்

இந்த தனிப்பிரிவு மூலம் காவல்துறையில் லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் பெற்று, அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தங்களது பணிகளை செய்வதற்காக லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு நிர்பந்தித்தாலோ, பொதுமக்கள் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், இதே எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரகசியமாக வைக்கப்படும்

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com