அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை - சிஐடியு தலைவர் சவுந்தரராஜன்

மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார் என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை - சிஐடியு தலைவர் சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து ஊழியர்கள், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படியை நிதிச் சுமையை காரணம் சொல்லாமல் தர வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்பாமல் இருப்பதால்தான் நேற்று 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தால் செல்ல தயாராக உள்ளோம். தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்ற பொய் தோற்றத்தை அரசு ஏற்படுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

நாங்கள் முன்வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எந்தவித முன்னேற்றமும் இல்லை. பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார். சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம். அரசு பஸ்கள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com