தேர்தல் நேரத்தில் பொய்யான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை: கனிமொழி எம்.பி பேட்டி

அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
கோவை,
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ந்தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது. இந்நிலையில், மாநாட்டு திடலை பார்வையிடுவதற்காக கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை, முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி.;
தேர்தல் அறிக்கை குழு, கோவை மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தேதிகளை முடிவு செய்யும். அதனைத் தொடர்ந்து, தொழில்துறையினர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிச்சயமாக, அனைத்து தரப்பு மக்களையும் சந்திப்போம். குறிப்பாக கோவையில் உள்ள தொழில் முனைவோரை உறுதியாக சந்திப்போம். மக்களின் தேவை என்ன என்பதை கேட்டறிந்து, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் தேர்தல் அறிக்கையில் அளிக்க உள்ளோம். தேர்தல் அறிக்கை என்பது வெறும் எண்ணிக்கைகளின் தொகுப்பாக இருக்காது.
தமிழக சட்டம் ஒழுங்கை பாராட்டிய ஆற்காடு நவாப் முகமது குறித்த கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக பல பொய்யான விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான நிலவரம் என்ன என்று ஊடகத் துறையைச் சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் தெரியும். இதற்கு மேல் விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வாக்கு வங்கி பற்றிய கேள்விக்கு, தேர்தல் முடித்த பிறகுதான், எந்தக் கட்சிக்கு வாக்கு எவ்வளவு வாக்குகள் சென்றுள்ளன என மிக தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பேசினார்.






