சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது:அர்ஜூன் சம்பத் பேட்டி

சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது:அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அதிபத்த நாயனார் குருபூஜை விழா மற்றும் சங்க காலம் முதல் இந்த காலம் வரை கடலோடிகள் என்ற கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து பரதவர் என அழைக்க வேண்டும். மேலும், பரதவர் அதிகம் வாழ்வதால், பாரதம் என பெயர் வழங்கலாயிற்று. வேதங்களைத் தொகுத்த வியாசர் ஒரு பரதவர். எனவே, மீனவர்களின் பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டும். அவர்களை கடல்வாழ் பழங்குடியினராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்கான தீர்மானத்தை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்.

சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது. அதைப்பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசுகிறார். எனவே, அதை நாங்கள் எதிர்க்கிறோம். சனாதனம் என்பது தர்மத்தோடு தொடர்புடையது. எனவே, சரியான புரிதல் இல்லாமல் பலர், சனாதனம் குறித்து பேசி வருகின்றனர். பல்வேறு ஊழல்களில் இருந்து மக்களை திசை திருப்ப தமிழக அரசு சனாதனம் குறித்து பேசிவருகிறது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com