என்னை யாரும் அரசியலில் இருந்து விரட்ட முடியாது - சேலத்தில் சசிகலா உறுதி

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலிலிருந்து யாராலும் விரட்ட முடியாது என்று சசிகலா கூறினார்.
என்னை யாரும் அரசியலில் இருந்து விரட்ட முடியாது - சேலத்தில் சசிகலா உறுதி
Published on

சேலம்,


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். .

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா சேலம் தாரமங்கலம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இங்கு ஏராளமான தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் மத்தியில் தமக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றுப்பயணம் மன மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழ்நாடு மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் விரும்புபவர்களை அரசியலில் இருந்து விரட்ட முடியாது.மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மாற்றம் வரும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com