தமிழ்மொழியை பிரபலமாக்குவதில் பிரதமர் மோடியைபோல யாரும் செயல்பட முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி

இந்தி பேசும் 300 மாணவர்கள் தற்போது இங்கு வந்து தமிழ் கற்கின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நேற்று நடந்த காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழிலேயே பேசினார். அவர் கூறியதாவது:-
இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் பிரபலம் அடைந்து வருகிறது. காசியும், தமிழும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல நூறு ஆண்டுகளாக தொடர்பில் உள்ளவை. தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவனை தமிழர்கள் பாடுகின்றனர்.
இந்த விழாவின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் கற்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தி பேசும் 300 மாணவர்கள் தற்போது இங்கு வந்து தமிழ் கற்கின்றனர். தமிழ் மொழி மிகவும் சக்தி வாய்ந்தது, அழகானது என்பது எல்லோருக்கும் தெரியும்.
உலக அரங்கில் தமிழ்மொழியை பிரபலமாக்குவதிலும், பெருமை சேர்ப்பதிலும் பிரதமர் மோடியைபோல யாரும் செயல்பட முடியாது. இதற்காக தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ் மக்களின் இதயத்துடிப்பை நன்றாக அறிந்த துணை ஜனாதிபதி இங்கே இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.






