"பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்"; ராமதாஸ் வேண்டுகோள்

ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டனர்
சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்அறிவித்தார். இது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதுதொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சொல்ல முடியாது-" என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் , பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டனர் . கடந்த இரு தினங்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்த நிலையில் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் .






