"நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

கோத்தகிரி அருகே 300 மீட்டர் நீளமுள்ள சாலை மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதால், பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
"நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 130 செண்டிமீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

கோத்தகிரி பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மாமரம், முள்ளூர் ஆகிய பகுதிகளில் ராட்சத காட்டு மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

இதே போல கேர்பெட்டா பிரிவு பகுதியிலும் மரம் சரிந்து விழுந்ததால், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல இந்த சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தன.

இதனிடையே, கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டத்திலிருந்து மெட்டுக்கல் கிராமத்திற்கு செல்லும் தார் சாலையின் சுமார் 300 மீட்டர் நீளமுள்ள சாலை, மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் அந்த கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

சாலை துண்டிப்பால் கரிக்கையூர் மற்றும் மெட்டுக்கல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனிடையே கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் இன்று ஒருநாள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறியுள்ளார். மேலும், கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் வருவாய் துறை, தீயணைப்பு துறையினர் 30 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com