

சென்னை,
நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்துடன் அவர் இணையப் போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாரன்ஸ் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நேரமும், அண்ணாமலையின் புதிய இயக்கம் வேகமாக வளர்ந்து வரும் சூழலும் இணைந்து பார்க்கப்படுவதால், இருவரும் கைகோர்க்கலாம் என்ற ஊகங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, லாரன்ஸ் நீண்ட காலமாக ரஜினி மீது கொண்டுள்ள நெருக்கமும், அண்ணாமலைக்கும் ரஜினிகாந்த் வட்டாரத்துக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாகக் கூறப்படும் அரசியல் பேச்சுகளும் இந்த ஊகங்களுக்கு காரணமாக உள்ளன.
இந்தநிலையில், அண்ணாமலை, ராகவ லாரன்ஸ் ஆகியோருக்கு ரஜினி ஆதரவு என வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் சார்பில் சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,
நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒரு என பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.