திருமாவளவனுக்கு நோபல் பரிசு; கிண்டலடித்ததை வாபஸ் பெற்ற வைகோ

திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று வைகோ கூறினார்.
திருமாவளவனுக்கு நோபல் பரிசு; கிண்டலடித்ததை வாபஸ் பெற்ற வைகோ
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நோபல் பரிசு

முதல்-அமைச்சர் விஜய் கரூர் போகக்கூடாது; பேசக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் கோர்ட்டு தி.மு.க.வுக்கு சாட்டையடி கொடுத்து உள்ளது. தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், த.வெ.க.ஆட் சியில் இடம் பெற்றிருந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த வைகோ, அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவு தான்' என்றார்.

இதனையடுத்து அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் வைகோ உங்களுக்கு நோபல் பரிசு தரலாம் என்று கூறியகருத்து பற்றி கேட்டபோது, 'நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிசு கிடைத்தாலும் அவருக்கு நன்றி' என்று தெரிவித்தார். இருவரிடையேயான பேச்சு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாபஸ் பெற்ற வைகோ

இந்த நிலையில், திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று கிண்டலடித்ததை வாபஸ் பெற்றுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “15 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு (திருமாவளவன்) ஊக்கம் அளித்துதான் வந்திருக்கிறேன்; என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாக தான் இருந்திருக்கிறேன்; எதிர்காலத்திலும் அப்படிதான் இருப்பேன்.

நான் பேசிய வார்த்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தால், நான் பேசிய என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்; "விசிக தலைவர் திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. எனக்கு இம்மியளவுகூட அவர் மீது கோபமோ, வருத்தமோ கிடையாது. திருமாவளவன் ஒரு நல்ல தலைவர்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com