

நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாகை நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் கோவில் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளையும், நாகை நகராட்சிக்குட்பட்ட சிந்தாதுறை மாதா கோவில் தெரு புதுப்பள்ளி சாலை பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
12 குழுக்கள் அமைப்பு
நாகை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்களையும் உள்ளடக்கிய வட்ட அளவிலான 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழுவிலும் 11 நபர்கள் வீதம் 1 வட்டத்தில் 33 நபர்கள் அடங்கிய 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் மாவட்டம் முழுவதும் 132 நபர்கள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டு வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் 5 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக்கூடம் 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. 29 முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.
கட்டுப்பாட்டு அறை
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கிவருகிறது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் மின்சாரவாரியம் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். இவர் அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, பொறியாளர் ஜெயகிருஷ்ணன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.