

சென்னை,
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அண்ணாநகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் இன்று, அண்ணாநகர் மண்டலம், வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் 2-வது அவென்யூவில் மழைநீர் வடிகால் பணி, நடுவங்கரைப் பகுதியில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி, 3-வது பிரதான சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டி, வார்டு-100க்குட்பட்ட ஹால்ஸ் சாலை சந்திப்புப் பகுதியில் மழைநீர் வடிகால் பணி, அப்பகுதியில் உள்ள ஓட்டேரி கால்வாய், கே.ஜி. கார்டன் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வெளியேற்றும் பகுதி, வார்டு-107க்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரும்பாக்கம் கால்வாய், நேரு நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, வார்டு-103க்குட்பட்ட அண்ணாநகர் 3-வது பிரதான சாலை மற்றும் நடுவங்கரைப் பகுதியில் உள்ள அம்மா உணவகம், வார்டு-101க்குட்பட்ட அண்ணாநகர் 1-வது அவென்யூவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை மேம்பாட்டுப் பணி, புல்லா அவென்யூ 1-வது பிரதான சாலையில் உள்ள ஶ்ரீ பாலாஜி பவன் ஹோட்டலில் பெருமளவு திடக்கழிவுகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் சமையலறையினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.