வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
மாநகராட்சி
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகாக விடுபட்ட பணிகளை துரிதப்படுத்த சென்னை மாநாகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னெச்சரிக்கை பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைநீர் வடிகால் கட்டும் பணிகள், கால்வாய்கள், மழைநீர்வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள், நீர்நிலைகளைத் தூர்வாருதல், அபாயகரமான மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களையும் தயார்நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.58.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு வார்டு வாரியாக தலா ரூ.5 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாக அனுமதி

மேலும் ஒவ்வொரு மண்டலங்களிலும் உடனடி சாலை சீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 15 மண்டலங்களுக்கும் மொத்தம் ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்காக 150 உயர் திறன் மோட்டார்கள் (100 HP மோட்டார்களுக்கு - ரூ.10 கோடி) மற்றும் 500 டிராக்டர் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மற்றும் பம்புகள் வாங்குவதற்காக (ரூ.16 கோடி) என மொத்தம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடர்பான பணிகளுக்காக, ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், அபாயகரமான மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com