வடமாநில வாலிபர் மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை: தொழிலாளி கைது

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் ஒரு வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தங்கிகிருந்து, திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வடமாநில வாலிபர் கொலை, தொழிலாளி கைது
Published on

தூத்துக்குடி,

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணத்தில் வடமாநில வாலிபரை வீட்டு மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சக தொழிலாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

வடமாநில வாலிபர்கள்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர்கான் தலைமையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தங்கி, திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் சப்ளை மற்றும் பானிபூரி, சைனீஸ் பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஊதிய பிரச்சினை

இதில் நோபிஹீசன் (வயது 28) என்பவரின் வேலை சரியில்லை என உணவக நிர்வாகம் ஜாகீர்கானிடம் கூறி, கடந்த 4-ம் தேதி நோபிஹீசனை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. இதனால் நோபிஹீசன், ஜாகீர்கானிடம் தனக்கு தர வேண்டிய ஊதியத்தைக் கேட்டுள்ளார். ஜாகீர்கான் உணவக உரிமையாளரிடம் பேசி ஊதியம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

வாலிபர் கொலை

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஜாகீர்கானுக்கு ஆதரவாகப் பேசிய சக தொழிலாளி இக்ராமூல் ஹக்(28) மற்றும் நோபிஹீசன் ஆகிய 2 பேருக்கும் இடையே தங்கியிருந்த வீட்டு மாடியில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த நோபிஹீசன், இக்ராமூல் ஹக்கை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்த இக்ராமூல்ஹக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொழிலாளி கைது

இதையடுத்து நோபிஹீசன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய நோபிஹீசனை போலீசார் உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com