

சென்னை,
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, குற்றவாளிகளுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்படுவதால், உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறினார்.
ஒரு வழக்கின் குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒரு குற்ற வழக்கு பதிவான நாளில் இருந்து உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.