மருத்துவர்கள் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி! - அன்புமணி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவர்களுக்கு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மருத்துவர்கள்
கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி! - அன்புமணி குற்றச்சாட்டு
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 மருத்துவர்களுக்கான பணியிடத் தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக மாற்றுத் திறனாளி மருத்துவர்களுக்கு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு மருத்துவமனைகளுக்கு 1100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற 1929 பேருக்கு கடந்த பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்களுக்கு இணையான மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் தங்களுக்கான பணியிடத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் மருத்துவர்களால் நீண்ட தொலைவுக்கு பயணிக்க முடியாது; தொலைதூர கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் பணியாற்ற முடியாது என்பதால் அவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும். அத்தகைய மருத்துவமனைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 1100 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 76 பின்னடைவுப் பணியிடங்கள், 39 நடப்புப் பணியிடங்கள் என மொத்தம் 115 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு விருப்பமான, வசதியாக பணியிடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும். ஆனால், முதல் நாளில் பொதுப்பிரிவினர் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விருப்பமான இடங்களை தேர்வு செய்து விட்டால் மாற்றுத் திறனாளிகளுக்கு விருப்பமான இடங்கள் கிடைக்காது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் அனுப்பிய 21.02.2025ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணியிடங்களைத் தான் முதலில் நிரப்ப வேண்டும். ஆனால், இவை எதையும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் பின்பற்றாதது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் துரோகமும், சமூக அநீதியும் ஆகும்.

இந்த அநீதியை களையும் நோக்குடன் பணியிடத் தேர்வுக்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். கலந்தாய்வில் விருப்பமான பணியிடங்கள் கிடைக்காத மாற்றுத் திறனாளிகளை அவர்கள் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்தி பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com