பூந்தமல்லி அருகே துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

சென்னை அரும்பாக்கம், ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிரபல ரவுடி கைது
Published on

சென்னை,

பூந்தமல்லி அருகே கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சுதாகரை போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர்.

தலைமறைவான ரவுடி

சென்னை அரும்பாக்கம், ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). இவர் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியும், ஆயுள் தண்டனை கைதியுமான அரும்பாக்கம் ராதாவின் முக்கிய கூட்டாளியான இவர், சில வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

ஜாமீனில் வந்த ரவுடி சுதாகர், கோர்ட்டில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அதிதீவிர குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் சுதாகரை தேடி வந்தனர்.

துப்பாக்கி முனையில் கைது

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் தன்னை சூழ்ந்து கொண்டதை அறிந்த சுதாகர் தப்பியோட முயன்றார். சமயோசிதமாக செயல்பட்ட போலீசார் அவரை துப்பாக்கி முனையில் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுதாகர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கோர்ட்டு உத்தரவின்படி அவரை சிறையில் அடைப்பதற்கான பணிகளில் அரும்பாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com