நவம்பர் 1 ஆம் நாள் தான் 'தமிழ்நாடு நாள்' ஆக கொண்டாடப்பட வேண்டும்: அண்ணாமலை

நவம்பர்‌ 1ஆம் தேதிக்கு பதிலாக ‌ ஜீலை 18-ம்‌ நாள்‌ தான்‌ தமிழ்நாடு நாள்‌ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும்‌ வியப்பாக உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கடந்த அதிமுக அரசு நவம்பர் 1 ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என அறிவித்த ஒரே காரணத்தால், திமுக அரசு அதை மாற்ற நினைப்பது அழகல்ல என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ராஸ் ராஜ்ஜியம் என்பது பின்னர் நாட்டில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகள் மெட்ராஸ் ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சென்றன. அந்த நாளான நவம்பர் 1ம் தேதியை அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலங்கள் தோன்றிய நாளாக கொண்டாடி வருகின்றன. அதே நாள் தான் சென்னை மாகாணம் தனியாக தமிழகமாக உருவெடுத்தது.

தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் உண்ணா நோன்பிருந்து நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அறப்போராட்டம் நடத்தி உயிர் துறந்தார். அதன் பின்பு தான் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு தனித்து உருவான நாள் நவம்பர் 1 தான், ஆனால் இதற்கு பெயா சூட்டப்பட்ட நாள் ஜீலை 18 ஆம் நாள் ஆகும். குழந்தை பிறந்தநாள் தான் குடும்பத்தினரால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். குழந்தைக்கு பெயா சூட்டிய நாளை எவரும் கொண்டாடுவது இல்லை.

கடந்த அ.தி.மு.க அரசு நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்த ஒரே காரணத்திற்காக, அதை மாற்ற நினைப்பது தி.மு.க அரசிற்கு அழகல்ல. வரலாற்றை திசை திருப்புவதே தி.மு.க வின் நோக்கமாக இருந்து வருகிறது. ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதை தை முதல் நாளாக மாற்ற முயன்றார்கள். இப்போது தமிழ்நாடு உருவான நவம்பர் 1 ஆம் நாளை மாற்ற முயல்கிறார்கள். மேலும், கடந்த 2020, நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் என்று இன்றைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே பத்திரிகைச் செய்தி வெளியிட்டதை நினைவுக்கூற விரும்புகிறேன். இதன் மூலம் மக்களுக்கு எதிரான முரண்பாட்டுக் கருத்துக்களையே தனது கொள்கை என்பதை தி.மு.க மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது. நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com