

சென்னை,
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், கவுரிவாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் 20-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.6 லட்சத்துக்கும் மேல் பணம் எடுக்கப்பட்டது போல அவர்களது செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், இதுபற்றி வங்கிகளுக்கு சென்று விசாரித்தனர். அதற்கு வங்கி ஊழியர்கள், பணம் எடுக்கப்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால் அது எப்படி? என்று தெரியவில்லை என கூறி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், இதுபற்றி சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உரிய நடவடிக்கை வேண்டும்
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, பொதுவாக செல்போனுக்கு மர்மநபர்கள் தொடர்புகொண்டு, வங்கியில் இருந்து பேசுவதுபோல் பேசி, வங்கி கணக்கு, ஏ.டி.எம். ரகசிய எண் குறித்த தகவல்களை கேட்டு அதன்மூலம் பணத்தை எடுப்பார்கள். ஆனால் அப்படி யாரிடமும் நாங்கள் ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை கூறாத நிலையில் எப்படி பணம் எடுக்கப்பட்டது? என தெரியவில்லை. இதுபற்றி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.