

கன்னியாகுமரி,
காதலனுடன் தவறான உறவில் பிறந்ததால் பச்சிளம் ஆண் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் நர்ஸ் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை மருத்துவர், வடசேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இதனால் நர்ஸ் கர்ப்பமானார்.
இதனையறிந்த அந்த வாலிபர், நர்சுடனான பழக்கத்தை துண்டித்து விட்டார். ஆனால், தான் கர்ப்பமாக இருந்ததை அந்த நர்ஸ் வேறு யாரிடமும் சொல்லாமல் மறைத்தபடி இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் நடைபெறாத நிலையில் காதலனால் கர்ப்பமாகி குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தனக்கும், தனது குடும்பத்துக்கும் அவமானம் என்று அந்த நர்ஸ் கருதினார். எனவே, குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் கொலை செய்து, முதியோர் இல்ல வளாக தென்னந்தோப்பில் வீசிச் சென்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து அந்த நர்சை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே உடல் நலக்குறைவு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.