சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்; 550 பேர் கைது

சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் எம்.ஆர்.பி. நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் நேற்று 500-க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுபின், மாவட்ட தலைவர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நர்சுகள் கலந்து கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கு முன் பொதுச்செயலாளர் சுபின் நிருபர்களிடம் கூறும்போது, எம்.ஆர்.பி. நர்சுகள் 2 ஆண்டுகள் தொகுப்பூதிய முறையில் பணி செய்த பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கடந்த 2015-ம் ஆண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என கூறி சென்றார். தற்போது தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கலைந்து செல்லுமாறு போலீசார் மாலையில் அறிவுறுத்தினார்கள். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் பேராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர்.
பின்னர் அவர்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் நர்சுகள் அங்கேயும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் அவர்களிடம் போச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.






