

சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினரிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒரு சில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், ஒரு சில பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், அத்தகைய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில், மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.5 ஆயிரமும், நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
போட்டியிட வாய்ப்பு
சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், கட்சியின் தலைமைக்கழகத்தில் இருந்து அதற்கான விருப்பமனுக்கள் மற்றும் ரசீது புத்தகங்களை பெற்றுச்சென்று, அது சம்பந்தமான விவரங்களை கட்சியினர் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்பமனுக்களைப் பெறவேண்டும்.
தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்புக்கோரி மனு அளிப்பவர்களுக்கு மட்டுமே, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.