பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
Published on

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்

வளர்ந்த மாநிலம் என்று சொல்லி மத்திய அரசு நமக்கான நிதியை குறைப்பு செய்கிறது. இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் கேட்டு பெறுவோம். 15-வது நிதிக்குழு தமிழகத்தின் பங்கை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருப்பது குறித்து கேட்கிறீர்கள். அவரின் இந்த கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறான பொய் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

திடீர் ஞானோதயம்

2006-2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் சென்றது. மு.க.ஸ்டாலினுக்கு அப்போது வராத ஞானோதயம், அக்கறை இப்போது வந்திருப்பது வியப்பளிக்கிறது.

உண்மையிலேயே அவருக்கு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் அப்போது இருந்த முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் இது போன்ற ஆலோசனையை தெரிவித்து இருக்கலாம். தி.மு.க. போக்குவரத்துத்துறை சொத்துகளை அடமானம் வைத்து சென்றிருந்தாலும், அதை சீராக்கி சேவை துறையாக்கியவர் ஜெயலலிதா இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய நிர்வாகிகள்

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்த நிர்வாகிகளை நீக்கி வருகிறோம். விரைவில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். ஜெயலலிதா பிறந்தநாளுக்குள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும்.

அம்மா உணவகம் திறக்கப்பட்டது வருமானத்தை ஈட்ட அல்ல, ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்க வேண்டும் என்பதற்காக தான். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இந்த திட்டம் எக்காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது.

கட்சி அலுவலகத்திற்குள் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் யார்? யார்? கலந்துகொள்வார்கள் என்பது குறித்து உங்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு) விரைவில் தெரிவிக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்வாரா என்பதை பொறுத்து இருந்து பாருங்கள். ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் நடக்கும்.

முதல்-அமைச்சர் பதவி

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்கள் முதல்-அமைச்சர் பதவியை இழந்து ஓராண்டு ஆகிறது. இது உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் சிரித்துக்கொண்டே, எதை கொண்டு வந்தோம், இழப்பதற்கு என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com