ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சின்னக்குட்டை ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

திருப்பூர் பல்லடம் சின்னக்குட்டை குளத்தின் ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை ஐகோரட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற போராடி வருவதாகவும், ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி சென்னை ஐகோர்ட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு, இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து அரசு தரப்பில், குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்துவருகிறது. பல ஏழை மக்கள் அந்த பகுதியில் குடியிருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏழைகள் குடியிருக்கிறார்கள், நீண்ட காலமாக குடியிருக்கிறார்கள் என்ற காரணங்களை ஏற்க முடியாது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள சின்னக்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com