முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி நன்கொடை வசூல் கொரோனா சிகிச்சைக்கு ரூ.50 கோடி ஒதுக்கி மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது. இதில் ரூ.50 கோடியை கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார்.
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி நன்கொடை வசூல் கொரோனா சிகிச்சைக்கு ரூ.50 கோடி ஒதுக்கி மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகளுக்கு நிதி அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள், சாமனிய மக்கள், திருநங்கைகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

இதுவரை (நேற்று முன்தினம்) பெறப்பட்ட ரூ.69 கோடி நன்கொடையில் இருந்து முதற்கட்டமாக ரூ.50 கோடியை கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களை தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஈகையும், இரக்கமும், கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-ந் தேதி வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் முதல்-அமைச்சர் உறுதியளித்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

17-ந் தேதி (நேற்று முன்தினம்) வரை இணையவழி மூலமாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.56 கோடியும் என மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. தனது வேண்டுகோளை ஏற்று, கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள ரூ.69 கோடியில் இருந்து, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்குவதற்காக ரூ.25 கோடியும் மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரெயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்கு தேவையான கன்டெய்னர்களை வாங்குவதற்காக ரூ.25 கோடியும் என முதற்கட்டமாக மொத்தம் ரூ.50 கோடியை செலவிட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com