கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை

பள்ளிபாளையம் அருகே கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை
Published on

பள்ளிபாளையம்

கழுத்தை அறுத்து கொலை

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் வண்ணாம் பாறை அருகே முக்குபாறை என்ற பகுதியில் சுப்பிரமணி என்பவரது கரும்பு தோட்டம் உள்ளது. இவர் நேற்று மாலை தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கையில் தங்க வளையல் இருந்தது.

மேலும் அந்த மூதாட்டியின் கழுத்திலும், கையிலும் காயம் ஏற்பட்டு, அவரது ஆடை கலைந்திருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் கிருத்திகாவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே கிருத்திகா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தொவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் ஓடப்பள்ளியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பாப்பாயி (வயது 65) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com