சுல்தான்பேட்டை அருகே முதியவர் வெட்டிக் கொலை-பீடி வாங்க காசு தராததால் மகன் வெறிச்செயல்

சுல்தான்பேட்டை அருகே பீடி வாங்க காசு தராததால் முதியவரை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுல்தான்பேட்டை அருகே முதியவர் வெட்டிக் கொலை-பீடி வாங்க காசு தராததால் மகன் வெறிச்செயல்
Published on

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே பீடி வாங்க காசு தராததால் முதியவரை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகராறு

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்செரிப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் கோபால் சாமி (வயது 90). இவருடைய மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் கோபால்சாமி, தனது மகனான முருகேசனுடன் (50) வசித்து வந்தார். முருகேசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரின் மனைவி கோபித்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். இதனால் தந்தையும், மகனும் கிழக்கு வீதியில் வசித்து வந்தார்கள். இந்தநிலையில் அடிக்கடி அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

அரிவாள்மனையால் வெட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் தனது தந்தையான கோபால்சாமியிடம் பீடி வாங்க காசு வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர், தன்னிடம் காசு இல்லை என்று கூறி உள்ளார். இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே கைகலப்பாக மாறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், வீட்டில் கிடந்த அரிவாள் மனையை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டினார். முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் நிலைகுழைந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் கைது

நேற்று காலை கோபால்சாமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்தார்கள். அப்போது அங்கு முருகேசன், கையில் அரிவாள்மனையுடன் இருந்ததோடு, முதியவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இதுபற்றி உடனடியாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இதுபற்றி அறிந்ததும் சூலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் அங்கு சென்று விசரணை நடத்தினர். இதையடுத்து அவரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பாசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பீடி வாங்க காசு தராததால் கோபால்சாமியை வெட்டிக் கொலை செய்ததாக முருகேசன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com