வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை

தனியாக வசித்து வந்த மூதாட்டி 5 பவுன் நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
Published on

நாகை,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டிசை சேர்ந்தவர் அகமது நாச்சியார் (வயது 66). மாடி வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் அகமது நாச்சியார் வசித்து வந்த வீட்டின் காம்பவுண்டில் இருந்த இரும்பு கேட்டை கழற்றி வைத்து விட்டு மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று உள்ளனர்.

பின்னர் மாடிக்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com